அடையாறில் உள்ள இறால் பண்ணை அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டின்போது அலுவலக ஊழியர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வினி பிஷரிஸ் நிறுவனம் தூத்துக்குடி, நாகை ஆகிய பகுதிகளில் இறால் பண்ணையை நடத்திவருகிறது. இந்த நிறுவனத்தில் அலுவலகம் சென்னை அடையாறு காந்தி நகரில் செயல்பட்டுவருகிறது.
இந்த அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் கடந்த நான்கு நாள்களாக சோதனையிட்டுவந்தனர். அப்போது வடபழனியைச் சேர்ந்த அலுவக ஊழியர் செந்தில் குமார் உடனிருந்துள்ளார். நான்கு நாள்களாக அவர் வீட்டுக்கு செல்லவில்லை.
அதிகாரிகள் மற்றொரு அறையில் சோதனையிட்ட போது செந்தில்குமார் ஒரு அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அடையாறு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் செந்தில் குமாரின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் வருமான வரித்துறை சோதனையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்திருப்பார் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து செந்தில் குமாரின் மரணத்துக்கு அஸ்வினி பிஷரிஸ் நிறுவனம்தான் பொறுப்பு என அவரது உறவினர்கள் காவல்துறையிடம் கூறினர்.